சிறையில் தி.மு.க.,வினர் சலுகைகளை கேட்கவில்லை : மாஜி அமைச்சர் துரைமுருகன்
சிறையில் தி.மு.க.,வினர் சலுகைகளை கேட்கவில்லை : மாஜி அமைச்சர் துரைமுருகன்
UPDATED : ஆக 03, 2011 11:15 PM
ADDED : ஆக 03, 2011 06:51 PM

கோவை : 'சலுகைகளை தி.மு.க.,வினர் கேட்டுப் பெறவில்லை; சிறை விதிப்படி அவை வழங்கப்பட்டுள்ளன' என, கோவை சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.,வை சந்தித்த பின், முன்னாள் சட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், சென்னை, திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ., அன்பழகனும் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை உறவினர்களும், தி.மு.க.,வினரும் சந்தித்து வருகின்றனர். நேற்று காலை, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பழனிச்சாமி, சென்னை மேயர் சுப்ரமணியன், பட்டிமன்ற நடுவர் லியோனி, வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி, மகன் ஆகியோர் சந்தித்தனர்.
சந்திப்புக்குப் பின், சிறைக்கு வெளியே வந்த துரைமுருகன் அளித்த பேட்டி: பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க.,வினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தனிப்பட்ட சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. சிறை விதிக்கு உட்பட்டு தான், சிறை அதிகாரிகளும் சலுகை வழங்கியுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடவில்லை என்கின்றனர். போலீஸ் அதிகாரிகள் அதை தெரிவிக்கக் கூடாது. வழக்கு உண்மையானதா, பொய்யானதா என, கோர்ட் தான் தீர்மானிக்கும்.
இந்த வழக்குகளை தி.மு.க., சட்டப்படி சந்தித்து, உண்மையை வெளிக் கொண்டு வரும். பொய் வழக்கு போட்டவர்களின் ஆட்சி நீடித்ததாக சரித்திரம் இல்லை; அழிந்ததாகத் தான் வரலாறு. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.