மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம்: அன்புமணி
மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம்: அன்புமணி
ADDED : நவ 30, 2024 07:34 PM
சென்னை:டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை, மத்திய அரசு அம்பலப்படுத்தி உள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரை, அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், மத்திய சுரங்கத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், 'அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதற்கு முன், தமிழக அரசிடமிருந்து சில விபரங்கள் பெறப்பட்டன. டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலத்தில் விடுவதற்கு வசதியாக, அப்பகுதியில் உள்ள 117 ஏக்கரிலான கிரானைட் சுரங்கத்திற்கான குத்தகையை, தமிழக அரசின் டாமின் நிறுவனம் திரும்ப ஒப்படைத்து விட்டது. நவம்பர் 11ல் சுரங்கம் ஏலம் விடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, அனைத்து வழிகளிலும் துணை போன திராவிட மாடல் அரசு, இப்போது மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததால், மக்களை சமாதானப்படுத்தும் விதமாக, தங்களுக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கும் சம்பந்தம் இல்லாதது போல எதிர்ப்பு தெரிவித்து நாடகமாடுகிறது. இந்த சூழ்நிலையில் தான், தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை, மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது.
தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் நலனை விட, தங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும். காவிரி டெல்டா மாவட்டங்களில், மீத்தேன் எரிவாயு ஆய்வுக்கு அனுமதி அளித்தது, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது என, திராவிட மாடல் அரசு மக்களுக்கு செய்த துரோகங்கள் ஏராளம்.
இப்போது, டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திலும் அதே துரோகத்தை, தி.மு.க., அரசு செய்கிறது. அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து, அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.