அ.தி.மு.க. கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்ப மாட்டாங்க! தி.மு.க. ரியாக்சன்
அ.தி.மு.க. கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்ப மாட்டாங்க! தி.மு.க. ரியாக்சன்
ADDED : டிச 15, 2024 04:16 PM

சென்னை; அ.தி.மு.க.,வின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்பப்போவதில்லை என்று தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று(டிச.15) நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க., அரசைக் கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந் நிலையில் அ.தி.மு.க.,வின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்ப போவதில்லை என்று தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
இன்று நடைபெற்ற அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், முதல்வர் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன் மூலம் களங்கம் சுமத்திடலாம் எனக் கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் இ.பி.எஸ்.
பொதுக்குழுவைக் கூட்டி விட்டோமே தீர்மானத்திற்கு என்ன செய்வது, எங்கே போவது, குறையின்றி நடந்துவரும் தி.மு.க., அரசு மீது எதைச் சொல்லி பழி போடுவது எனத் தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டனத் தீர்மானம் எனக் கதை கட்டியிருக்கிறார் 'கட்டுக்கதை' பழனிசாமி.
இந்திய வானிலை ஆய்வு மையத்தாலேயே கூட சரிவர கணிக்கமுடியாத பெஞ்சல் புயலால் எதிர்பார்க்காத அளவு, எதிர்பார்க்காத இடங்களில் அதி கனமழை பெய்த போதும் முதல்வரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த கால நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க., ஆட்சியில் புயலின் போது பெருத்த உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதை போல தற்போதைய ஆட்சியிலும் நடக்கும் என எண்ணி ஏமாந்து போன பழனிசாமி தற்போது கண்டன தீர்மானமாவது நிறைவேற்றுவோம் என நிறைவேற்றி இருக்கிறார்.
பா.ஜ., அரசோடு கூட்டணியில் இருந்த காலத்தில் 15வது நிதி ஆணையம் தெரிவித்த வரி உயர்வைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டளையை, சிரம் ஏற்று 'சரி' என தலையாட்டி தமிழக மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு தற்போது சொத்துவரி பற்றி நீலிக்கண்ணீர் வடித்து நடித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் எனக் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் பசிபிக் கடலளவு பெருகிக் கிடந்த அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி தற்போது குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களைக் காத்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீது சுண்டுவிரலை நீட்டிக்கூட பேச தகுதியில்லை.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியைக் கொடுக்க காரணமே அ.தி.மு.க., ஆட்சி தான். 2019ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் மதுரை மேலூர் பகுதியில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து ஏலம் விட்டுள்ளது.
தற்போதும் கூட மறைமுகமாக பா.ஜ.,வோடு கள்ள உறவில் கைகோத்து மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பா.ஜ.,வுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான். ஆனால் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்குக் கண்டனமாம்.
அ.தி.மு.க., ஆட்சியில் இருள் சூழ்ந்து கிடந்த தமிழகம் திராவிட மாடல் நல்லாட்சியில் ஒளி வீசுயபடி வளர்ந்து வருகிறது. தமிழக மக்களின் நலனே முக்கியம் என்று நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சி மீது அள்ளிவிடும் அ.தி.மு.க.,வின் கண்துடைப்பு கண்டனக் கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்ப போவதல்லை; கட்டுக்கதை பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.