தி.மு.க., அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு
தி.மு.க., அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு
ADDED : டிச 17, 2024 07:48 PM

சென்னை: 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு, உண்மையை மூடி மறைக்கும் தி.மு.க., அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை மாற்ற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, உண்மைகளை வெளிக்கொண்டுவர வகை செய்யும்.இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்கது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிப்பதால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? இந்த வழக்கை நீங்களே விசாரிக்க வேண்டும் என்று இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? அதுவே உங்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கட்டும்” என்று நீதிபதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வழக்கமாக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யும்போது, அதன் மீது எதிர்மனுதாரர்கள் பதிலைப் பெற்று விசாரித்து தீர்ப்பளிப்பது தான் வழக்கம். ஆனால், தொடக்க நிலையிலேயே தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டிருப்பது அரிதிலும் அரிதான நிகழ்வு.
இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டால், அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்பதுதான் தி.மு.க., அரசின் அச்சம். அதனால் இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட மறுத்த தமிழக அரசு, இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டிலும் மேல்முறையீடு செய்தது.
ஆனால், இந்த வழக்கை தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்? அதுவே அனைத்தையும் வெளிப்படுத்துகிறது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பதன் மூலம், தமிழக அரசின் நோக்கத்தை அவர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்த தீர்ப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுகவினருக்கு உள்ள தொடர்புகளையும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் மூடி மறைக்கவேண்டும் என்று திமுக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.