மத்திய அரசிடம் தி.மு.க., சரண்: ராமதாஸ் குற்றச்சாட்டு
மத்திய அரசிடம் தி.மு.க., சரண்: ராமதாஸ் குற்றச்சாட்டு
ADDED : பிப் 03, 2025 06:57 AM

சென்னை : 'நெல் கொள்முதல் விவகாரத்தில், மத்திய அரசிடம் தமிழக அரசு சரண் அடைந்து விட்டது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
'தமிழகத்தில், காவிரி டெல்டா மாவட்டங்கள் தவிர, மீதமுள்ள மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது' என, தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது, தமிழக விவசாயிகளுக்கு தி.மு.க., அரசு இழைக்கும் பெரும் துரோகம்.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும், மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்கக்கூடாது. மத்திய அரசு நிர்ணயிப்பதை விட, குவின்டாலுக்கு கூடுதலாக 130 ரூபாயை, தமிழக அரசு வழங்குகிறது. மத்திய அரசு நிறுவனத்தால், நெல் கொள்முதல் செய்யப்படும் போது, இந்த ஊக்கத் தொகை கிடைக்காது.
நாடு முழுதும் விளையும் நெல்லை, மத்திய அரசுதான் கொள்முதல் செய்கிறது.
மத்திய அரசுக்கு நெல் கொள்முதல் செய்யும் முகவராகவே, தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தாங்களே நேரடியாக நெல் கொள்முதல் செய்வதாக, மத்திய அரசு கூறும்பட்சத்தில், தமிழக அரசு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால், மத்திய அரசிடம், தமிழக அரசு சரண் அடைந்திருக்கக்கூடாது. தமிழக அரசே நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அதை செய்ய மத்திய அரசு முன்வரவில்லை என்றால், தமிழக அரசே அதன் சொந்த நிதியில், நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.