ADDED : அக் 14, 2025 04:55 AM

அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் துயரத்தில், தன் குடும்பத்தில் இருவரை இழந்த பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவரை, தி.மு.க., ஒன்றிய செயலர் ரகுநாதன் தொடர்பு கொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசைவார்த்தை கூறி, மிரட்டல் தொனியில் பேரம் பேசியுள்ளார்.
தி.மு.க., வழக்கறிஞர் வில்சன், மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, ஒரு கருத்துருவாக்கத்தை திணிக்க முயற்சிக்கிறார்.
தி.மு.க.,வினர் ஏன் பதறுகின்றனர்; என்ன தவறு செய்தனர்? வழக்கு வாபஸ் பெற, தி.மு.க., ஒன்றிய செயலர் வாயிலாக எதற்காக பணம், வேலை தர முன்வர வேண்டும்; பிரபாகரன் ஏன் மிரட்டப்படுகிறார்? நீதி அமைப்பின் உச்சமான உச்ச நீதிமன்ற தீர்ப்பையே தங்கள், 'விஞ்ஞான ஊழல்' தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு, எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற, இவ்வளவு முயல்கின்றனர்?
தி.மு.க., ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தன் தாய்க்கும் பாதுகாப்பு வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட, அதற்கு தி.மு.க., அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.