தி.மு.க., குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம்: பிரதமர் மோடி சபதம்
தி.மு.க., குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம்: பிரதமர் மோடி சபதம்
UPDATED : மார் 06, 2024 01:57 AM
ADDED : மார் 04, 2024 11:59 PM

சென்னை : மக்கள் நல திட்டங்களுக்கான நிதியில் இருந்து திமுக குடும்பம் கொள்ளை அடித்த பணம் மீட்கப்பட்டு தமிழக மக்களுக்காக செலவிடப்படும். இது மோடியின் உத்தரவாதம்,'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், தமிழக மக்களால் எனக்கு சக்தி கிடைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவு மிகப் பழமையானது. நீங்கள் என் மீது பொழியும் அன்பும் கூட மிகவும் பழமையானது.
ஆனால், சில ஆண்டுகளாக நான் தமிழகத்திற்கு வரும்போது, இங்குள்ள சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. இதற்கு காரணம், பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான். சென்னையில் இதை தெளிவாக பார்க்கிறேன். பல திட்டங்களின் தொகையை எனது அரசு நேரடியாக பயனாளிகளுக்கு அனுப்பி விடுகிறது.
வீட்டுக்கு வந்தது வெள்ளமா பாலாறா? ஊடக மேலாண்மை என்கிறார் பிரதமர்
சென்னை கூட்டத்தில் மோடி மேலும் பேசியதாவது:வளர்ச்சி அடைந்த பாரதத்தின் கூடவே, வளர்ச்சி அடைந்த தமிழகத்திற்கான உறுதிபாட்டை, நான் மேற்கொண்டுள்ளேன். நாம் மிக விரைவாக பாரதத்தை, உலகின் மூன்று தலைசிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்ற வேண்டும். இதில், தமிழகத்தின் பங்களிப்பு மிகப்பெரியது.
'ஸ்மார்ட் சிட்டி'
சென்னை போன்ற நகரங்களின் வளர்ச்சிக்காக, நம் அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது. சென்னையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற கட்டமைப்பு திட்டப் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், குடிநீர், கழிவுநீர் மேலாண்மைக்கான 'அம்ருத்' திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், சென்னை விமான நிலைய விரிவ ாக்க திட்டம் என, சென்னை மக்கள் மேம்பாடு அடைவதற்காக, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை துறைமுகத்திற்கும் மதுரவாயலுக்கும் இடையில் மேம்பாலம் கட்ட, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மத்திய அரசு, ஒருபுறம் தமிழகம் மற்றும் சென்னையின் எதிர்காலத்திற்காக பணியாற்றுகிறது. மறுபுறம், மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க., அரசு, சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களின் கனவுகளை கண்டுகொள்ளவில்லை.சில காலம் முன்பு மிகப்பெரிய புயல் வந்தது. சென்னை மக்களுக்கு ஏகப்பட்ட துயரம் உண்டானது. தி.மு.க., அரசு அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, அவர்கள் துயரத்தை மேலும் அதிகப்படுத்தும் வேலைகளை செய்திருக்கிறது.
இலவசமாக தடுப்பூசி
தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், வெள்ள மேலாண்மை செய்யவில்லை. மாறாக ஊடக மேலாண்மையை செய்கின்றனர். வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து விட்டது. பாலும், தேனும் ஓடுவதாக, ஊடகங்களில் கூறுகின்றனர். தி.மு.க., அரசுக்கு மக்களின் துயரம் குறித்து, அக்கறை இல்லை. தமிழகம் குறித்தும் அக்கறை இல்லை. மத்திய அரசு, ஏழைகள் நலனை கருத்தில் வைத்து செயல்படும் மக்கள் அரசு. கொரோனா காலத்தில், ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்கினோம். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்க செய்தோம்.தமிழகம் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையில் முன்னணி மாநிலம். அந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, நம் அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் அளித்தது. மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக கச்சை கட்டிக்கொண்டு பணியாற்றுகிறது.
குடும்ப அரசியல் பேசும் கட்சிகள், தங்களுடைய எதிர்காலம் குறித்து மட்டும் சிந்திக்கின்றன. ஆனால், நான் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயல்படுகிறேன். குடும்ப கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில், 18,000 கிராமங்களில் மின்சாரம் இல்லை. இரண்டரை கோடி குடும்பங்கள் வீட்டில் இருள் சூழ்ந்திருந்தது.நம் அரசு எரிசக்தி பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து, அந்த திசையில் செயல்படுகிறது. தற்போது கல்பாக்கத்தில் இருந்து வந்தேன். நம் நாடு, எரிசக்தியில் தற்சார்பு அடையும் வகையில், மிகப்பெரிய அடியெடுத்து வைத்துள்ளது. கல்பாக்கத்தில் மின் உற்பத்திக்காக, வரலாற்று சிறப்புமிக்க அணு உலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின் நிலையம்
இந்த அணுசக்தி மையத்தில், 'கோர் லோடிங்' துவங்கி உள்ளது. சில காலத்தில் மின் உற்பத்தி துவக்கப்பட்டு விடும். அப்போது, இந்த தொழில்நுட்பம் பெற்ற நாடுகளில், பாரதம் இரண்டாவது நாடாகி விடும். எரிசக்தி தேவைகளை நிறைவு செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம். தெலுங்கானாவில் 1,600 மெகாவாட்; ஜார்கண்டில் 1,300 மெகாவாட் அனல் மின் நிலையங்கள்; உத்தரப் பிரதேசத்தில் 300 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம்; 1,600 மெகாவாட் அனல் மின் நிலையம்; ராஜஸ்தானில் சூரியசக்தி ஆலைகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் ராய்ப்பூரில் எத்தனால் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நொய்டாவில் கழிவு நீர் சத்திகரிப்பு ஆலையிலிருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி பணி துவக்கப்பட்டுள்ளது; இவையெல்லாம், கடந்த சில நாட்களில் செய்யப்பட்டவை.மத்திய அரசு, ஒரு கோடி குடும்பங்களுக்கு மின்சக்தி அளிக்கும் சூரிய சக்தி திட்டத்தை துவக்கி உள்ளது. இனி வீடுகளுக்கு மின் கட்டணம் இருக்காது. வீட்டில் சூரிய சக்தி உபகரணங்களை பொருத்தினால் போதும்; மின்சாரம் இலவசமாக கிடைக்கும். உபரி மின்சாரத்தை, அரசு வாங்கிக் கொள்ளும். இந்த திட்டத்திற்கு 75,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. இத்திட்டம் மின் சக்தி துறையில் பாரதத்தை தன்னிறைவு அடைய செய்யும். இதில், தமிழகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கும். இலவச மின்சாரம்; கட்டணம் பூஜ்ஜியம்.
'தி.மு.க., ஆட்சியின் ஆதரவில் செழிக்கிறது போதை பிசினஸ்'
தி.மு.க., அரசின் ஆதரவால்தான் தமிழகத்தில் போதைப்பொருள் வியாபாரம் செழித்து வருவதாக பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வரும் போதை பொருட்கள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் பிரதமர் கருத்து தெரிவிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மோடி பேசியதாவது: என் மனதை அரிக்கும் கவலையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தை சேர்ந்த பெற்றோர் மனதிலும், அந்த கவலை உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழகத்தில் போதைப் பொருட்கள் தடையின்றி, அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பதுதான் என் மனதை உருக்கும் கவலை. உங்கள் குழந்தைகள் குறித்த கவலை, என்னையும் அரிக்கிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் கட்சி குறித்து, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய குழந்தைகள் மட்டுமல்ல, நாளைய தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும்.
இது அபாயத்தின் அறிகுறி. தமிழகத்தின் எதிரிகள் மீதான நடவடிக்கை, மேலும் விரைவுப்படுத்தப்படும். இது மோடி அளிக்கும் உத்தரவாதம். வளர்ச்சி அடைந்த தமிழகத்திற்காக, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். வளர்ச்சி அடைந்த தமிழகம் ஏற்படும்போதுதான், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் பாதை வலுவடையும். நாம் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம். நீங்கள் எனக்கு ஆசி வழங்க வந்துள்ளீர்கள். டில்லியில் 'ஏசி' அறையில் அமர்ந்திருக்கும் சிலருக்கு, இந்த காட்சியை பார்த்து, தமிழகம் பா.ஜ.,வில் இணைந்து விட்டது என நடுங்கி போவர்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
மோடிக்கு குடும்பமே கிடையாது: - லாலு: நாடு என் வீடு; மக்களே குடும்பம்: மோடி
'மோடிக்கு குடும்பம் இல்லை என்பதால் மற்ற தலைவர்களின் வாரிசுகளை வசை பாடுகிறார்' என ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பேசியதற்கும் மோடி பதிலடி கொடுத்தார்.
அவர் கூறியதாவது:தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் 'இண்டியா' கூட்டணி கட்சிகள், குடும்பத்துக்கு முதல் உரிமை கொடுக்கின்றன. நான் நாட்டுக்கே முதல் உரிமை என்கிறேன். 'இண்டியா' கூட்டணியை சேர்ந்தவர்கள், என்னை வசைபாட, புதிய பார்முலாவை கண்டுபிடித்துள்ளனர். 'மோடிக்கு குடும்பம் இல்லை. அதனால் இப்படி பேசுகிறார்' என்கின்றனர்.எனக்கு 16 வயதானபோது, வீட்டை துறந்து நாட்டிற்காக வெளியேறினேன். நீங்கள்தான் என் குடும்பம். பாரத நாட்டின் மக்கள்தான் என் குடும்பத்தார். நாட்டின் இளைஞர்கள் என் குடும்பத்து மக்கள். அதனால் தான் அவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமானதாக்க, இரவு, பகலாக கடுமையாக உழைக்கிறேன்.
நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க, நான் பணியாற்றி வருகிறேன். நாட்டின் விவசாயிகள், ஏழைகள்தான் என் குடும்ப சொந்தங்கள். அவர்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்க, என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன். பாரதமே என்னுடைய குடும்பம். அதனால் நாடு முழுதும், ஒரே குரலெடுத்து, 'நான் மோடியின் குடும்பத்தை சேர்ந்தவன்' என்கிறது. காங்கிரஸ், தி.மு.க., மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள், ஊழலில் ஊறிப் போய் உள்ளன.
அவர்களுக்கு அவர்களின் குடும்பம்தான் எல்லாம். ஊழல்தான் அனைத்தும். பல தசாப்தங்களாக, இப்படிப்பட்ட அரசியலை செய்து பழகி விட்டன. இதன் காரணமாக, தேசிய இளைஞர்கள், அரசியல் மீது வெறுப்படைந்துள்ளனர். நேற்று வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, துாய்மையான அரசியலுக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பல லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செல்வதுதான், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வளர்ச்சி திட்டங்களில் வழக்கம்போல கோடி கோடியாக கொள்ளை அடிக்க முடியாமல் போனதுதான் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல். இந்த விஷயத்தில் ஒரு குடும்பம் மொத்தமுமே, பயங்கர எரிச்சலில் உள்ளது. பணம் கிடைக்காததால், அதை நாங்கள் செய்தோம் என, தம்பட்டம் அடித்து கொள்கிறது. அதிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்... தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பணத்தை நீங்கள் கொள்ளை அடிக்க இந்த மோடி விட மாட்டார். இதுவரை கொள்ளை அடித்த பணம் மீட்கப்பட்டு, தமிழக மக்களுக்காகவே செலவிடப்படும். இது மோடியின் உத்தரவாதம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
மக்கள் மனதை புண்படுத்திய குடும்ப உறுப்பினரின் ஆணவம்
சனாதனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து, அவருடைய பெயரை சொல்லாமல் பிரதமர் விமர்சித்தார். அவர் சொன்னார்..
குடும்ப அரசியல் என்பது மக்கள் விரோத அணுகுமுறை. அதில் மற்றவர்களை துச்சமாக கருதும் அகங்காரம், ஆணவம் தலைவிரித்து ஆடுகிறது. இங்குள்ள குடும்ப அரசியல் கட்சியின் முக்கிய உறுப்பினர், அதிகாரத்தின் முக்கிய பதவியை பெற்ற உடனே நாட்டையும், நாட்டு மக்களையும் அடிமையாக கருதி பேசி வருகிறார். அரசியல் சாசனத்தின் கீழ் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாகவும், தான் வகிக்கும் பதவிக்கு இருக்கும் கண்ணியத்தை மறந்தும் பேசுகிறாார்; அதற்கு எழுகின்ற இயல்பான எதிர்ப்பை விளையாட்டாக கடந்து போகிறார்.
நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டே அந்த அமைச்சரை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது. கோடானு கோடி மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி, காலில் போட்டு மிதித்து அவமானப்படுத்துவதுதான் குடும்ப அரசியல் நடத்துபவரின் அடையாளம். அதிகாரம், மமதை காரணமாக மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காத ஒருவர், தமிழக அரசின் முக்கிய பதவியில் நீடிப்பது கவலை அளிக்கும் விஷயம்.இவ்வாறு மோடி கூறினார்.

