காவிரி பிரச்னையில் தி.மு.க., துரோகம்: பழனிசாமி குற்றச்சாட்டு
காவிரி பிரச்னையில் தி.மு.க., துரோகம்: பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : டிச 13, 2025 06:42 AM

சென்னை: 'காவிரி நீர் விவகாரத்தில், தமிழகத்துக்கு தி.மு.க., துரோகம் செய்துள்ளது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவது, தொடர் கதையாக உள்ளது.
துர்பாக்கிய நிலை
காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட, திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, தற்போது, அணை கட்ட, அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள, 30 பேர் அடங்கிய, உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளது.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்னையான, காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, தமிழகம் சார்பில், வலிமையான வாதங்களை, வழக்கறிஞர்கள் வாயிலாக எடுத்து வைக்காமல், 'ஏனோ தானோ' என, செயல்பட்டதால், இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், காவிரி நீர் பிரச்னையில், தமிழகத்தின் உரிமைகளை, கர்நாடகத்துக்கு விட்டுக் கொடுப்பதே, வாடிக்கையாகி விட்டது.
துரோக செயல்
தி.மு.க., தலைமை, தங்களுடைய சுயநலத்துக்காக, தங்களின் குடும்ப தொழிலை பாதுகாக்க, கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, 'லாலி' பாடும் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
தி.மு.க.,வின் இந்த துரோக செயல், மன்னிக்க முடியாத குற்றம். தமிழக மக்களுக்கு, துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எடுக்க வேண்டும். காவிரியில், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வெளியிட்ட அறிக்கையில், 'காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டும் பணியை, தீவிரப்படுத்தும் கர்நாடக அரசின் செயல்பாடு, கடும் கண்டனத்திற்கு உரியது.
'தமிழகத்தை பாலைவனமாக்கும், கர்நாடக அரசின் சதித்திட்டத்தை, தமிழக அரசு, ஆரம்ப நிலையிலேயே, தடுத்து நிறுத்த வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.

