ஒற்றுமையாக தேர்தல் பணி செய்யுங்க: இ.பி.எஸ்., அறிவுரை
ஒற்றுமையாக தேர்தல் பணி செய்யுங்க: இ.பி.எஸ்., அறிவுரை
ADDED : மார் 11, 2024 04:58 AM

சென்னை: 'கட்சி தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, 2,500 பேர் விருப்ப மனு அளித்தனர்.
அவர்களுக்கான நேர்காணல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. பொதுச்செயலர் பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணைப் பொதுச்செயலர்கள் முனுசாமி, விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன், தலைமை நிலையச் செயலர் வேலுமணி ஆகியோர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
இதுகுறித்து, நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'விருப்ப மனு அளித்தவர்களின் விபரம் கேட்ட பின், கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ, அவர்களுக்காக 24 மணி நேரமும் உழைத்து, அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். களம் நமக்கு சாதகமாக உள்ளது என பழனிசாமி தெரிவித்தார்' என்றனர்.
நேற்று, 20 தொகுதிகளுக்கான நேர்காணல் முடிந்த நிலையில், இன்றும் 20 தொகுதிகளுக்கான நேர்காணல் தொடர்கிறது.

