ADDED : அக் 17, 2025 04:06 PM

சென்னை: தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக இந்து விரோத கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மக்களையும் சமமாகவே நடத்த வேண்டும். ஆனால், திமுக அரசு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறக்கூட மனமில்லாமல், இந்து மதத்தின் மீது மட்டும் வெறுப்பை கக்கி வருகிறது.
திமுக தலைவராக ஸ்டாலினிடம் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால் முதல்வர் என்பவர் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர். முதல்வருக்கு விருப்பு வெறுப்புகள் இருக்கக் கூடாது. அது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் வழிமுறைகளுக்கு எதிரானது. மக்கள் அனைவரையும் சமமாகவே நினைக்க வேண்டும். இதை முதல்வர் ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும்.
இந்த சூழலில் ஸ்டாலினின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், 'நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்' என்று கூறியதாக செய்திகள் வந்துள்ளன. மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூற துணிச்சல் இல்லாதவர், 'தீபாவளி பண்டிகைக்கு மட்டும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாழ்த்துகள்' என்று கூறுவது தமிழகத்தில் உள்ள இந்துக்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் 100 கோடிக்கும் அதிகமான இந்துக்களை அவமதிக்கும் செயல்.
'எவ்வளவுதான் அதர்மம் தலை தூக்கினாலும் இறுதியில் தர்மமே வெல்லும்' என்ற இந்து மதத்தின் அடிப்படை கோட்பாட்டை வலியுறுத்தி கொண்டாடப்படுவது தான் தீபாவளி பண்டிகை. அதனால்தான் என்னவோ, தர்மத்திற்கு எதிரான தீய சக்திகள் தீபாவளி பண்டிகையை கொச்சைப்படுத்தி வருகின்றன. இப்போது அவர்களுக்கு வெற்றி கிடைப்பது போல தோன்றலாம். ஆனால் இறுதியில் அவர்களுக்கு நிச்சயம் தோல்வி கிடைக்கும்.
இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதில் கூட கண்ணியத்தை கடைப்பிடிக்காத இந்து விரோத திமுக அரசுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது கடும் கண்டனம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.