ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ் தகவல் வழங்க 'டான்பெட்' மறுத்தது சரியல்ல: ஐகோர்ட்
ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ் தகவல் வழங்க 'டான்பெட்' மறுத்தது சரியல்ல: ஐகோர்ட்
ADDED : ஏப் 25, 2026 10:14 PM

சென்னை: 'டான்பெட் எனும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு, தமிழக அரசு பொது தகவல் அதிகாரியை நியமித்துள்ள நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஏற்க மறுத்தது சரியல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
'டான்பெட்' எனும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தில், கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த பி.ஜோதிபாசு, ஆர்.டி.ஐ., எனும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்துஇருந்தார்.
வழக்கு
இதற்கு பதிலளித்த, டான்பெட் பொது தகவல் அதிகாரி, 'கூட்டுறவு சங்கங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது' எனக்கூறி, ஜோதிபாசு கோரிய விபரங்களை வழங்க மறுத்தார். அதை எதிர்த்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து, விண்ணப்பத்தில் கோரிய தகவல்களை வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜோதிபாசு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்நிறுவனம், தமிழக அரசின் நிர்வாகத்தில், நிதியில், கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
ரத்து
டான்பெட் நிறுவனத்துக்கு பொது தகவல் அதிகாரியை நியமித்து, 2007ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தகவல் வழங்க மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, 2023ம் ஆண்டு மே 2ல் மனுதாரர் அளித்த விண்ணப்பத்தில் கோரிய விபரங்களை, நான்கு வாரங்களில் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
