ADDED : டிச 13, 2024 03:12 AM

திருநெல்வேலி:''மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து காலி செய்த பிறகு பெரிய அளவில் சுற்றுலாத் திட்டம் உள்ளதா ''என்ற கேள்விக்கு ''என் வாயை கிளறாதீர்கள் ''என அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்தார்.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, நேற்று அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு மலைப்பகுதி மாஞ்சோலை எஸ்டேட் சென்றார். அங்குள்ள தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொழிலாளர்கள் 4 பேருக்கு தெற்கு பாப்பான்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கி விளக்கேற்றினார்.
தொடர்ந்து திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். கலெக்டர் கார்த்திகேயன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்துாரி , எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வஹாப், ரூபி மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரு கூறுகையில் '' திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தாலும் அதை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ. 4000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் டாடா சோலார் பவர் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் துவக்கி வைக்க வர உள்ளார்.
அப்போது திருநெல்வேலி மேற்கு சுற்று வட்டச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிந்த திட்டங்களை துவக்கி வைக்கிறார்'' என்றார். மாஞ்சோலையில் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றிய பிறகு அங்கு பெரிய அளவில் தனியார் சுற்றுலா திட்டம் வர உள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர் கேட்டதற்கு என் வாயை கிளறாதீர்கள் என கூறிச் சென்றார் அமைச்சர்.

