சமூக வலைதள விளம்பரங்களை நம்பாதீங்க: ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தல்
சமூக வலைதள விளம்பரங்களை நம்பாதீங்க: ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தல்
ADDED : ஜன 22, 2026 05:59 AM

சென்னை: 'சமூக வலைதளங்களில் வரும், பாரம்பரிய மருத்துவ முறை கருத்துகளை நம்ப வேண்டாம்' என, ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கலையரசி, 19, என்ற இளம்பெண், யு டியூப் பார்த்து, உடல் எடையை குறைக்க, 'வெங்காரம்' சாப்பிட்ட நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர்இழந்தார். இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட, ஆயுஷ் மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகள் குறித்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதும், பரிந்துரைப்பதும், அதிகளவில் நடந்து வருகிறது.
இதுபோன்ற விளம்பரங்களுக்கு, ஏற்கனவே, ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ள நிலையில், ஆண்மை குறைபாடு, உடல் எடை குறைப்பு, மூலம் உள்ளிட்டவை தொடர்பாக, தொடர்ந்து சமூக வலைதளங்களில், அதிகளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முகவரி இல்லாத விளம்பரங்களை நம்ப வேண்டாம் என, ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரி கூறியதாவது: ஆயுஷ் மருந்துகள் சார்ந்த விளம்பரமோ, தனி நபர் டாக்டர் சார்ந்த விளம்பரமோ செய்வது, பெரும்பாலும் குறைக்கப் பட்டுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் அவற்றை கட்டுப்படுத்துவது சவாலானதாக உள்ளது.
பல விளம்பரங்களில், மொபைல் எண் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அந்த எண்ணை அழைத்து முகவரி கேட்டாலும், அவர்கள் கொடுப்பதில்லை. இதனால், அது போன்று விளம்பரம் செய்வோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. அதேநேரம், அந்த விளம்பரங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்படும்.
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும், ஆயுஷ் மருத்துவம் சார்ந்த, 'டிப்ஸ்' போன்றவற்றை கேட்டு, அப்படியே செயல்படுத்த வேண்டாம். ஆரம்ப சுகா தார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவர்களிடம் ஆலோசித்து மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

