மிரட்டி பணம் வசூலிக்கவில்லை பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில்
மிரட்டி பணம் வசூலிக்கவில்லை பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில்
ADDED : மார் 18, 2024 12:47 AM
தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை:
பொதுப்பணி துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாக, தன் சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்து சிக்கிக்கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காக, தனியே ஒரு அமைச்சரை வைத்திருந்தார். சி.பி.ஐ., நீதிமன்றத்தில், இன்னமும் வழக்கு நடந்து வருகிறது.
இப்படிப்பட்ட குற்றப்பட்டியல் உடைய பழனிசாமி, பாவத்தை பற்றி எல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார். தி.மு.க., சார்பில், யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதை வெளிப்படை தன்மையுடன், தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம்.
இதில், மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தை குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார். அதற்காக அந்த நிறுவனத்துக்கு, எந்த சலுகையும், தி.மு.க., ஆட்சியில் தரப்படவில்லை. அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் வழியே, பா.ஜ., பணம் பறித்துள்ளது. இது குறித்து பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா.
பா.ஜ., உடன் கூட்டணியே கிடையாது என்று கூறுபவருக்கு, பா.ஜ., மிரட்டி பணம் பறிக்கும் மோசடித்தனத்தை கண்டித்து அறிக்கை விட, முதுகெலும்பு உள்ளதா. நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ, பணம் வசூலிக்கவில்லை என்பதை பழனிசாமிக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.
பழனிசாமி கைக்கு அ.தி.மு.க., வந்தது முதல், அந்தக் கட்சி அதலபாதாளத்திற்கு போய் கொண்டிருக்கிறது. நடந்த அனைத்து தேர்தல்களிலும், தோற்று முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருப்பவர் அவர் தான். அவருக்கு எத்தனை தடவை தான் மக்கள் பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அறிக்கையில் பாலு கூறியுள்ளார்.

