ADDED : ஏப் 11, 2025 01:02 AM
சென்னை:தமிழக, கேரள வனப்பகுதிகளில், நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு, வரும், 24ம் தேதி துவங்க உள்ளது.
தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம், 2022ல் துவங்கப்பட்டது. இதன்படி, நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது, அதன் வாழிடங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதல்முறையாக, கடந்த ஆண்டு ஏப்ரல், 29ல் வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக, கேரள வனப்பகுதிகளில், இரண்டு மாநில வனத்துறையினரும் இணைந்து இப்பணியை செய்தனர்.
கணக்கெடுப்பில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வரும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட இடங்களில், 1,031 வரையாடுகள் இருப்பது தெரியவந்தது.
இந்த ஆண்டும் தமிழக, கேரள வனத்துறையினர் இணைந்து, வரும், 24 முதல், 27ம் தேதி வரை வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 176 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.