ADDED : ஜூன் 01, 2025 05:29 AM

மதுரை :  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியின்போது இறந்தாலோ, மருத்துவ காரணமாக பணி செய்ய இயலாமை ஏற்பட்டாலோ அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்.
இதற்காக மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலி பணியிடங்களுக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் இவ்வகை பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், கல்வித்துறையில் 2015 -2016க்குப் பின் பெரும்பாலும் இப்பணி நியமனங்கள் நடக்கவில்லை. தற்போது வரை, 1,600க்கும் மேற்பட்டோர் கருணை அடிப்படையிலான நியமனங்களுக்காக காத்திருக்கின்றனர்.பிற துறைகளில் உள்ளது போல கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் இவ்வகை பணி நியமனங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: வருவாய், வேளாண், மின்வாரியம், வனம், பொதுப்பணி உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் இவ்வகை நியமனங்களை உரிய காலத்தில் மேற்கொள்கின்றனர்.
கல்வித்துறையில் பெரும்பாலும் இளநிலை உதவியாளர் நியமனங்களே அதிகம் இருக்கும். இப்பணிக்கு காத்திருக்கும் சிலர், 50 வயதை அடைந்துவிட்டனர். இன்னும் நியமிக்கவில்லை என்றால் சிலர் பணி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிற துறைகளை விட கல்வித்துறையில் தான் பணியிடங்களும், காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன.
கல்வித்துறையில் இவ்வகை நியமனங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

