கடையில் டீ குடித்த டிரைவர் மீது தோட்டா பாய்ந்து காயம்
கடையில் டீ குடித்த டிரைவர் மீது தோட்டா பாய்ந்து காயம்
ADDED : நவ 22, 2025 12:22 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ரோட்டோர கடையில் டீ குடித்த டிரைவர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் காயமடைந்தார். தொண்டியை சேர்ந்த சேவியர் 40, மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர். நேற்று மதியம் 3:00 மணிக்கு தொண்டி-நம்புதாளை ரோட்டோரத்தில் டீ கடையில் டீ குடித்தார். அப்போது திடீரென்று பாய்ந்து வந்த துப்பாக்கி தோட்டா அவரது வலது பக்க தோளில் பாய்ந்தது.
மயக்கமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் நம்புதாளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தோளில் பதிந்திருந்த தோட்டாவை டாக்டர்கள் அகற்றினர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் பறவைகளை வேட்டையாடும் கும்பல் அதிகம் உள்ளது. துப்பாக்கிகளை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடுகின்றனர். இரவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது.
வேட்டையாடுபவர் களிடம் துப்பாக்கி உள்ளதால் அவர்களின் அருகே சென்று தட்டி கேட்க அச்சமாக உள்ளது. சேவியர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது துாரத்தில் ஊருணி உள்ளது.
அங்கு அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் பறவைகள் ஏராளமாக வசிக்கின்றன. பறவைகளை வேட்டையாடும் கும்பல் சுட்டபோது தோட்டா சேவியர் மீது பாய்ந்திருக்கலாம் என்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

