ADDED : அக் 18, 2024 10:20 PM
சென்னை:சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டத்தில் இயக்குவதற்கு, 'ஆல்ஸ்டாம்' நிறுவனம் தயாரித்த டிரைவர் தேவைப்படாத முதலாவது ரயில், சி.எம்.ஆர்.எல்., நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சை சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஆல்ஸ்டாம். இந்திய அரசின், 'மேக் இன் இந்தியா' மற்றும், 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டங்களின் கீழ், மூன்று பெட்டிகள் உடைய, 36 மெட்ரோ ரயில்களை உள்நாட்டில் தயாரிக்க, கடந்த பிப்ரவரி மாதம் ஆர்டர் பெற்றது. அதன்படி, பெங்களூரில் வடிவமைக்கப்பட்டு, ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் உள்ள ஆலையில் மெட்ரோ ரயில்களை தயாரித்து வருகிறது.
அவற்றில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களின் முதலாவது தொகுப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஆல்ஸ்டாம் ஒப்படைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் முதல் லைட் அவுஸ் வரை, 26 கிலோ மீட்டர் துாரத்துக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் அமையவுள்ள, 28 மெட்ரோ ரயில் நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும்.
திறமையான, சுற்றுச்சூழலுக்கு ஆதரவான மற்றும் திருப்தியான பயண அனுபவத்தை பயணிகளுக்கு, இந்த ரயில் வழங்கும் என்று ஆல்ஸ்டாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆல்ஸ்டாம் நிறுவனம் ரூ.1,130 கோடியில் ரயில்கள் தயாரித்ததுடன் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆர்டர் பெற்றது
சென்னை மெட்ரோ ரயில் முதலாவது திட்டத்துக்கு, 208 பெட்டிகளை தயாரிக்க 2010ல் ஆர்டர் பெற்று, சப்ளை செய்தது.

