ADDED : ஜூன் 09, 2025 02:11 AM

கோவை: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோவை புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, 6:00 மணிக்கு கோவை சந்திப்பு அருகே வந்த போது, சிக்னல் கிடைக்காமல் நிறுத்தப்பட்டது.
ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சோதனையில், கோவை சந்திப்பில் இருந்து சிறிது துாரத்தில், தண்டவாளம் மாற்றும் அமைப்பில் கற்கள் வைக்கப்பட்டிருப்பதால், சிக்னல் கிடைக்காதது தெரிந்தது.
தண்டவாளத்திலும் கற்கள் போடப்பட்டிருந்தன. கற்களை அகற்றி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், போதையில் நான்கு பேர் தண்டவாளத்தில் கற்களை வைத்தது தெரிந்தது. அப்பகுதியில் சுற்றித்திரிந்த நான்கு பேரையும் பிடித்தனர்.
அவர்கள், துாத்துக்குடியை சேர்ந்த வின்சென்ட் ராஜ், 20, விஜய்சங்கர், 21, சதீஸ்குமார், 21, புவனேஸ்குமார், 22 என, தெரிந்தது. போலீசார் நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

