சேலம் அரசு மருத்துவமனையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி
சேலம் அரசு மருத்துவமனையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஆக 12, 2025 01:33 AM
சேலம், அரசு மருத்துவமனையில், போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், நேற்று அரசு துறைகள் சார்பில் 'போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' என்பதை வலியுறுத்தி, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு மருத்துவமனை மன நலத்துறை சார்பில், போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவமனை டீன் தேவி மீனாள் தலைமையில், கண்காணிப்பாளர் ராஜ்குமார், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை, மன நலத்துறை தலைவர் டாக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
* துணை முதல்வர் உதயநிதி தலைமையில், சென்னையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்கிற பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு, காணொலி மூலம் நேற்று மாநில அளவில் நடந்தது. தொடர்ந்து, சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளை பாராட்டி, சான்றிதழ், கேடயங்கள் வழங்கி அமைச்சர் பாராட்டினார். தொடர்ந்து பொம்மலாட்டம், சிலம்பம், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் நடந்தது. துணை மேயர் சாரதாதேவி, டி.ஆர்.ஒ., ரவிக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
* இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தலைமையில், நகராட்சி துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
* மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வரை போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், மாணவியர் பங்கேற்றனர்.
பேரணியை கல்லுாரி முதல்வர் திருப்பதி, மேட்டூர் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி துவக்கி வைத்தனர். நாட்டு நலத்திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்கள் சசிகுமார், ராதாகிருஷ்ணன், காயத்ரி, போதை பொருள் ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் திராவிட மணி பங்கேற்றனர். பஸ் ஸ்டாண்டில் அனைத்து மாணவ, மாணவியரும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தனர்.