ADDED : ஜன 28, 2024 01:33 AM
சென்னை: சென்னையில், 23.25 கோடி ரூபாய் மதிப்பிலான, 93 கிலோ போதைப் பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் அளித்த பேட்டி:
சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கிடைத்தது. கூடுதல் எஸ்.பி., லட்சுமணன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
அக்குழுவினர், நேற்று முன்தினம் திருவொற்றியூரை சேர்ந்த நீலமேகன், 50 என்பவரை கைது செய்தனர். அவரிடம், 25 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சம்சுதீன், 33 என்பவரிடமிருந்து, 68 கிலோ மெத்தகுலோன் பறிமுதலானது.
மொத்தம், 93 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் இந்திய மதிப்பு, 23.25 கோடி ரூபாய். சர்வதேச மதிப்பு கூடுதலாக இருக்கலாம்.
இக்குழுவினர், 97 கிலோ ஆம்ரோஸ் என்ற வேதிப்பொருளையும் பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில், 50,000 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 20 கோடி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8,200 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக, '10581' என்ற இலவச தொலைபேசி எண்; 94984 10581 என்ற வாட்ஸாப் எண்; spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், கூடுதல் எஸ்.பி., லட்சுமணன் தலைமையிலான தனிப்படை குழுவினரை பாராட்டி பரிசு வழங்கினார்.