மற்றொரு சொத்து குவிப்பு வழக்கிலும் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
மற்றொரு சொத்து குவிப்பு வழக்கிலும் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
ADDED : ஏப் 24, 2025 09:03 PM
சென்னை:வருமானத்துக்கு அதிகமாக, 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி ஆகியோரை விடுவித்து பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த வழக்கை, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என, வேலுார் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக நீர்வளத் துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், கடந்த 2006- - 2011ம் ஆண்டில் பொதுப் பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 2007- - 2009ம் ஆண்டு காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 1.40 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, 2011ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிந்தது.
அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அவர்களை விடுவித்து, 2017ல் வேலுார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, நீதிபதி பி.வேல்முருகன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி தரப்பில், 'வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள், வழக்கு காலகட்டத்துக்கு முன் வாங்கியவை' என, வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து, வேலுார் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், இவ்வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, தினசரி விசாரணை நடத்தி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க, வேலுார் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இதேபோல், 3.92 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, அமைச்சர் துரைமுருகன், மனைவி, மகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட உத்தரவையும், நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

