அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
ADDED : ஜூன் 09, 2025 08:35 AM

மதுரை: உச்சிப்புளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில், 12வயது சிறுமி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருத்தாச்சலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா வேனில் 15 பேர் இன்று அதிகாலை 5 மணிக்கு ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். உச்சிப்புளி அருகே மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வந்து கொண்டு இருந்த கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் சுற்றுலா வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், காரை ஒட்டி வந்த கீழக்கரை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (29) மற்றும்
சுற்றுலா வேனில் வந்த 12 வயது மகாலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். இந்த விபத்து அதிகாலை 5 மணிக்கு நிகழ்ந்துள்ளது. எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.