முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
ADDED : அக் 30, 2025 12:55 PM

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: இன்றைய தினம் 118வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக நானும் எங்கள் மூத்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி உள்ளோம்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தேவர் பெருமகனார் ஜெயந்தி விழாவை அரசு தரப்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். தேசியத்தையும், தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் தெய்வத் திருமகனார் தேவர். எம்ஜிஆர், தேவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக சட்டமன்ற வளாகத்தில் அவரது முழு உருவப்படத்தை திறந்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சுமார் 13 கிலோ தங்கத்தில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் சாத்தினார். ஜெயலலிதா தேவருக்கு நந்தனத்தில் முழு உருவச் சிலையை நிறுவினார். தேவர் தன் வாழ்நாளில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சுமார் 4,000 நாட்கள் சிறையில் இருந்தவர். அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தல், முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தல் ஆகிய 2 தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்று மக்கள் செல்வாக்கை நிரூபித்து காட்டியவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் தனக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் பிரித்துக் கொடுத்து ஏழைகளை வாழவைத்த கொடை வள்ளலாக திகழ்ந்தவர். அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அதிமுக சார்பாக அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். அவர் தேசிய தலைவராக விளங்கியவர், மக்களுக்காக பாடுபட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். தேசத்துகாக பாடுபட்ட அவருக்கு அனைவரும் சேர்ந்து புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது, இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
இதையடுத்து, இபிஎஸ்ஸிடம், ஓபிஎஸ் - செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் வருவதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தெரியவில்லை… வந்தால்தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்,” என்றார்.

