ADDED : ஜூலை 09, 2025 01:02 AM
சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், தன் சொத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1991 - -96ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, இந்த வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என, வாலாஜாபாத் சார் - பதிவாளருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், 2021 பிப்., 27ல் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா, ஊத்துக்காடு கிராமத்தில், தனக்கு சொந்தமான, 2.15 ஏக்கர் நிலத்துக்கு வில்லங்க சான்றிதழ் கோரி விண்ணப்பித்த போது, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், தன் சொத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்ததாகக் கூறி, வாலாஜாபாத் ஆறுமுகப்பேட்டையை சேர்ந்த, 68 வயது மூதாட்டி கம்சலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில், கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட நிலத்தை, நான் பொது ஏலத்தில் வாங்கினேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கும், என் சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறை, மாவட்ட கலெக்டர், தமிழக தொழில் முதலீட்டு கழகம் ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே, சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும்.
இந்த சொத்து தொடர்பாக, பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளக்கூடாது என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, மனுதாரரின் கோரிக்கை குறித்து, ஆவணங்களை சரிபார்த்து பதில் அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், தமிழக தொழில் முதலீட்டு கழகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

