ADDED : ஜூலை 23, 2025 03:04 AM

விழுப்புரம் : ''வரும் சட்டசபைத் தேர்தலுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமையில் பலமான கூட்டணி அமையும்,'' என சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விழுப்புரத்தில் நேற்று அளித்த பேட்டி:
இந்த மண்ணின் பிரச்னைகளை தீர்க்காததோடு, உரிமைகளுக்காக குரல் எழுப்பாத பா.ஜ., - காங்., போன்ற தேசிய கட்சிகள், தமிழகத்திற்கு ஒருபோதும் தேவையில்லை.
தடுக்கப் போவதில்லை இங்குள்ள ஆட்சியாளர்கள், மக்கள் பிரச்னைகளை தீர்க்காமல் விட்டதால்தான், தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால் பதிக்க துடிக்கின்றன.
காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற ஆறுகளை மையப்படுத்தி உள்ள நதி நீர் பிரச்னைகள், மொழி, மண் வளம், இயற்கை வளம் சுரண்டல் பாதிப்புகளை இவர்கள் தடுக்கப் போவதில்லை.
திராவிட கட்சிகளால் அவர்களை எதிர்த்து, கேள்வி கேட்க முடியாது. காரணம், திராவிடக் கட்சிகள் இரு தேசிய கட்சிகளோடும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்து உள்ளன.
மாநிலத்தின் கல்வி உரிமை பறிப்பு, நீட் தேர்வு அறிவிப்பு போன்றவை இங்குள்ள ஆட்சியாளர்கள் ஒப்புதலோடு தான் நடந்தது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வை, எந்த மாநிலத்தவரும் எழுதலாம் என அனுமதி அளித்தது மாபெரும் தவறு.
அணு உலையை தமிழகத்தில் அனுமதித்தது, என்.எல்.சி., வாயிலாக நிலத்தை அபகரித்து, சுரங்கம் தோண்டி வாழ்வாதாரத்தை பறித்ததெல்லாம், யார் ஆட்சி காலத்தில் நடந்தது?
பா.ஜ.,வை எதிர்ப்பதை போல், தி.மு.க.,வினர் நாடகம் போடுகின்றனர். அதாவது திரைமறைவு கூட்டணி. அதேநேரம், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., நேரடியாக கூட்டணி வைத்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனை நடத்தி, தி.மு.க., தம்பிகளை ஓடஓட விரட்டியதும், எங்கே தன் குடும்பத்தையும் நோக்கி வந்து விடுவரோ என, நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சாக்கில் டில்லிக்குப் போனார் முதல்வர் ஸ்டாலின்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை அனுமதிக்காத தி.மு.க., அரசு, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பிற்கு மட்டும் அனுமதி அளித்தது ஏன்?
ஒரு வீட்டில் அம்மாவுக்கு 1,000 ரூபாய், மகளுக்கு 1,000 ரூபாய், மகனுக்கு 1,000 ரூபாய், என அனைவருக்கும் உதவித்தொகை மட்டும் கொடுத்தால் போதுமா?
குடும்ப வாழ்வாதாரம் மேம்பட்டு விடுமா என்ன?
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக, ஆண்டுக்கு 12,௦௦௦ கோடி ரூபாய் செலவு செய்யும் அரசு, அந்த தொகையில் நல்ல திட்டங்களை கொடுத்து, நிரந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
என் விருப்பம் நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் கட்சிக்காரர்களை அனுப்பி ஆதார் ஓ.டி.பி., கேட்டுக் கொண்டிருக்கின்றனர். யாரை ஏமாற்ற இதெல்லாம்?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும்; அப்படித்தான் அமைய வேண்டும். அதுதான் விருப்பம்.
விரைவில் என் கட்சி தலைமையில் பலமான கூட்டணி ஏற்படுத்தப்படும்; விரைவில் நடக்க உள்ள கட்சி மாநாட்டில், சட்டசபை தேர்தல் கூட்டணி நிலை குறித்து தெளிவாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.