ADDED : ஏப் 18, 2026 04:42 AM

சென்னை: தேர்தல் விதிமீறல் தொடர்பாக, ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ்கனிக்கு எதிரான இரண்டு வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ்கனி போட்டியிட்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, நடத்தை விதிகளை மீறி, தேர்தல் அதிகாரிகள் அனுமதி இல்லாமல், ஒலிபெருக்கி பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், திருவாடானை பஸ் நிலைய நுழைவாயிலில், ஏணி சின்னத்தில் ஓட்டளிக்கக் கூறி போஸ்டர் ஒட்டியதாகவும், நவாஸ்கனிக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நவாஸ்கனி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது நவாஸ்கனி தரப்பில், 'தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. பஸ் நிலைய நுழைவாயிலில் மனுதாரரோ, அவரது கட்சியினரோ போஸ்டர் ஒட்டினர் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை' என வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, நவாஸ்கனிக்கு எதிரான இரண்டு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
