பதில் மனு தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு அபராதம்
பதில் மனு தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு அபராதம்
ADDED : ஆக 07, 2025 12:53 AM
சென்னை:திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம், 30,000 ரூபாய் அபராதம் விதித்தது.
'டாஸ்மாக்' கொள்முதல் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
இதற்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன், ரவீந்திரன் தாக்கல் ெசய்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில், 'பதில் மனு தயாராகவில்லை என்பதால், தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என்று கேட்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'இரண்டு முறை, ஏற்கனவே அவகாசம் வழங்கிய பின்னும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்? இது சரியான நடவடிக்கை அல்ல' என்றனர். அதற்கு, 'ஒருங்கிணைந்த பதில் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால், கடைசி வாய்ப்பாக அவகாசம் வழங்க வேண்டும்' என, அமலாக்கத் துறை தரப்பில் மீண்டும் கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'மனுவுக்கு தலா 10,000 ரூபாய் வீதம், 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு, அமலாக்கத் துறை செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.