தி.மு.க., புள்ளி வாங்கிய சொத்துகள் பட்டியல் தயாரிக்கிறது அமலாக்க துறை
தி.மு.க., புள்ளி வாங்கிய சொத்துகள் பட்டியல் தயாரிக்கிறது அமலாக்க துறை
ADDED : டிச 12, 2025 04:11 AM

சென்னை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., கவுன்சிலர் சங்கர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கிய சொத்துகள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடி நகராட்சி தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி. இவரின் கணவர் சங்கர். தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினராகவும், 29வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் சேர்ந்து, ஏலக்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் சங்கர், ஏழு மாதங்களில், 1,200 கோடி ரூபாய் வரை ஏலக்காய் வியாபாரம் செய்துள்ளதாக தெரிகிறது.
இதன் வாயிலாக அவர், 70 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், போடி இரட்டை வாய்க்கால் பகுதியில், சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோன் மற்றும் அவரது வீட்டில், ஐந்து நாட்களாக, வருமான வரித்துறை அதிகாரி களும்; சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சங்கர் குடும்பத்தார் வரி ஏய்ப்பு செய்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கி இருப்பது தெரியவருகிறது. அது குறித்து பட்டியல் தயாரித்து வருகிறோம்.
'மேலும், சங்கரின் மகன் லோகேஷ், வரி ஏய்ப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தந்தையுடன் சேர்ந்து, வட மாநிலங்களுக்கு, 3,000 கிலோ ஏலக்காய் அனுப்பி, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து விசாரித் து வருகிறோம்' என்றனர்.

