அய்யப்பன் கோவிலில் தங்கம் திருட்டு சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
அய்யப்பன் கோவிலில் தங்கம் திருட்டு சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
ADDED : ஜன 21, 2026 07:48 AM

சென்னை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், 4.54 கிலோ தங்கம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழகம் மற்றும் கேரளாவில், 21 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவில் மேற்கூரை, கருவறை கதவுகள் மற்றும் துவார பாலகர்கள் சிலைகளில் இருந்து, 4.54 கிலோ தங்கம் திருடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். தற்போது, அம்மாநில கூடுதல் டி.ஜி.பி., வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இத்திருட்டு தொடர்பாக, கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த புரோக்கர் உன்னி கிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார், தந்திரி கண்டரரு ராஜீவரரு உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தற்போது, இந்த திருட்டில் நடந்த சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவார பாலகர்கள் சிலைகள் மற்றும் மேற்கூரை உள்ளிட்ட இடங்களில் தங்கமுலாம் பூசும் பணிகளை, சென்னை, அம்பத்துாரில் உள்ள, 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனம் செய்துள்ளது.
அதன் தலைமை செயல் அதிகாரியான பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த நகை கடை அதிபர் கோவர்த்தன் ஆகியோரும் கைதாகி உள்ளனர்.
இதனால், அம்பத்துாரில் உள்ள தங்க முலாம் பூசும் நிறுவனம், சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள, பங்கஜ் பண்டாரி மகன் பதன்ராஜ் பண்டாரி வீடு, சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை கடை பணியாளர் கல்பேஷ் என்பவர் வீடு உட்பட, சென்னையில் ஆறு இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.
கேரள மாநிலத்தில், தேவசம் போர்டு மற்றும் கைதான நபர்களுக்கு சொந்தமான இடங்கள் என, இரு மாநிலங்களிலும், 21 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

