ADDED : ஜன 25, 2024 01:12 AM
சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணி, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில், அதிகளவில் செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்ட எட்டு பேர் மீது, 2012ல் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, கவுதம சிகாமணி, உறவினர் ராஜ மகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் ஆகியோருக்கு எதிராக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், 90 பக்க குற்றப்பத்திரிகையை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து, நகல்கள் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.
சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.மலர்வாலண்டினா முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கவுதம சிகாமணி உள்பட அனைவரும் ஆஜராகினர்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், 'குற்றப்பத்திரிகை ஆவணங்களில் உள்ள சில பக்கங்களில் இடம்பெற்ற விபரங்கள் தெளிவில்லாமல் உள்ளன; அவற்றை தெளிவாக படிக்கக்கூடிய வகையில் வழங்க வேண்டும்' எனக்கூறி, அதற்கான மனுவை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, இதற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.