அதிகார மமதை, அராஜகப்போக்கு! தி.மு.க., அரசை லெப்ட், ரைட் வாங்கிய இ.பி.எஸ்.
அதிகார மமதை, அராஜகப்போக்கு! தி.மு.க., அரசை லெப்ட், ரைட் வாங்கிய இ.பி.எஸ்.
ADDED : செப் 11, 2024 01:15 PM

சென்னை: எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் தி.மு.க., நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார்.
ஓசூர் அருகே மத்திய அரசின் நல திட்டத்தை தொடங்கி வைக்கும் பூமி பூஜையில் கலந்து கொள்ள வேப்பனஹள்ளி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி. முனுசாமி அங்கு வந்திருந்தார். இதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தமது ஆதரவாளர்களுடன் கே.பி.முனுசாமி மறியல் போராட்டத்தில் இறங்கினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில்,வேப்பனஹள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், துணைப்பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமியை தி.மு.க.,வினர் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் தி.மு.க.,வின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.