துன்பங்கள் நீங்கி... இன்பங்கள் பெருக...! இ.பி.எஸ். தீபாவளி வாழ்த்து
துன்பங்கள் நீங்கி... இன்பங்கள் பெருக...! இ.பி.எஸ். தீபாவளி வாழ்த்து
ADDED : அக் 30, 2024 11:49 AM

சென்னை; அனைவரது வாழ்விலும், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;
நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத்திருநாளாம் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ்செயலால் மக்களையும், தேவர்களையும், பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில் மக்கள் புத்தாடைகளை அணிந்து இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளைப் பரிமாறி பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.
தித்திக்கும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.