இ.பி.எஸ்., நண்பர் இளங்கோவன் கல்லூரியில் ஐ.டி., ரெய்டு!
இ.பி.எஸ்., நண்பர் இளங்கோவன் கல்லூரியில் ஐ.டி., ரெய்டு!
ADDED : அக் 23, 2024 11:49 AM

திருச்சி: இ.பி.எஸ்., நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமான தனியார் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்.,யின் நெருங்கிய நண்பர் ஆர்.இளங்கோவன். இவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தவர்.
தற்போது சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக திருச்சி முசிறி அருகே கல்லூர் ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று(அக்.,23) இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் ரெய்டு!
கோவையில் உள்ள இளங்கோவனின் உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து இளங்கோவன் கூறியதாவது: எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது. என்றார்.