அற்பமான காரணங்கள் சொல்லி அரசியல் செய்கிறார் இ.பி.எஸ்., அமைச்சர் நேரு பதிலடி
அற்பமான காரணங்கள் சொல்லி அரசியல் செய்கிறார் இ.பி.எஸ்., அமைச்சர் நேரு பதிலடி
ADDED : அக் 15, 2024 06:29 AM
சென்னை : 'அற்பமான காரணங்களை சொல்லி அரசியல் செய்யும் பரிதாப நிலைக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார்' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கிண்டலடித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கைக்கு, அவர் அளித்துள்ள பதில் அறிக்கை:
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல், சென்னையில் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக, எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
படிக்கவில்லை
கடந்த 30ம் தேதி மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார். மாவட்ட நிர்வாகங்கள், மழையை எதிர்கொள்ள செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்; உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதெல்லாம் செய்தியாக வெளியானது; அதை பழனிசாமி படிக்கவில்லை.
முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தபோதும், பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் காலங்களில் தனக்கு விளம்பரம் கிடைக்காதா என்று பழனிசாமி காத்திருக்கிறார். பேரிடர் காலங்களில் தன்னார்வலர்கள் அளித்த நிவாரண பொருட்களில், ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டியவர்களிடம் விளம்பர மோகம் தானே இருக்கும்.
துணை முதல்வர் பதவியை இன்று பரிகாசம் செய்யும் பழனிசாமி, தன்னை துணை முதல்வராக்க வேண்டும் என, வேலுமணி மிரட்டிய போது, தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியை கொடுத்தது ஏன்?
அருகதையில்லை
தன் ஆட்சியை காப்பாற்றி கொள்ள, துணை முதல்வர் பதவியை கேடயமாக பயன்படுத்திய பழனிசாமிக்கு, விளம்பரம் பற்றி பேச அருகதை இல்லை. சட்டசபையில், அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை தானே வெளியிட்டு விளம்பரம் தேடியவர் தான் பழனிசாமி.
சென்னை மாநகராட்சி ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் மட்டுமே பங்கேற்றார்; அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்று பழனிசாமி கேட்டிருக்கிறார். கடந்த 30ம் தேதி முதல்வர் நடத்திய கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
துாங்கிக் கொண்டிருந்த பழனிசாமியை யாரோ எழுப்பி, தேர்தல் வரப்போகிறது; தினமும் அறிக்கை விடுங்கள் என்று சொல்லியிருக்கின்றனர். அதனால், இப்படி அற்பமான காரணங்களை சொல்லி அரசியல் செய்யும் நிலைக்கு, அவர் தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வாறு நேரு கூறியுள்ளார்.