சீனப் பெருஞ்சுவர் போல் நீளும் இ.பி.எஸ்.., பயப்பட்டியல்; அமைச்சர் நேரு கிண்டல்
சீனப் பெருஞ்சுவர் போல் நீளும் இ.பி.எஸ்.., பயப்பட்டியல்; அமைச்சர் நேரு கிண்டல்
ADDED : டிச 17, 2024 11:12 AM

சென்னை: ''எல்லாம் பயம் மயம்' எனச் சீனப் பெருஞ்சுவர் போல் இ.பி.எஸ்.,யின் பயப் பட்டியல் நீள்கிறது' என அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
அவரது அறிக்கை:
பா.ஜ.,வோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க., அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தி.மு.க., அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு 'கண்டனம்' என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் 'வலியுறுத்தல்' என்றும் சொல்லி பா.ஜ., பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி.
இ.பி.எஸ்.,க்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சி.பி.ஐ பயம், வருமானவரித் துறை பயம், கவர்னர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம்! இப்படி இ.பி.எஸ்.,யின் பயப் பட்டியலும் “எல்லாம் பயம் மயம்” எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க., ஆதரித்து ஓட்டளிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா ராஜ்யசபாவில் தோல்வி அடைந்திருக்கும்.
இரட்டை வேடம்
பார்லிமென்டில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு. ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு. முத்தலாக் தடை சட்டத்திற்கு லோக்சபாவில் ஆதரவு, ராஜ்யசபாவில் எதிர்ப்பு என அ.தி.மு.க., இரட்டை வேடம் போட்டது. முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024ல் ராஜ்யசபாவில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது.
நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக பா.ஜ., நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.
'நான் ஒரு விவசாயி' என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷவாயு நீங்கள்.
பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து இ.பி.எஸ்., அறிக்கை விட்டிருக்கிறாரா? இவ்வாறு அமைச்சர் நேரு கூறியுள்ளார்.

