கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
ADDED : ஜன 21, 2026 08:04 PM

சென்னை: கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை நிர்வாகிகளை திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
தமிழகத்திலுள்ள 'கறிக்கோழி பண்ணை விவசாயிகள்' கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். உணவு மற்றும் மூலப்பொருட்கள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் தற்போது இந்நிறுவனங்கள் வளர்ப்பு கூலியாக வழங்கும் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசாவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தங்களது போராட்டங்களினால் எந்தவித பயனுமில்லாததால், 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பண்ணையாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து திமுக அரசு 2026ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதியன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியது.
இந்நிலையில் திமுக அரசு இம்மாத ஆரம்பத்தில் 10 நிர்வாகிகளை எந்தவித காரணமுமின்றி கைது செய்தது. இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், கறிக்கோழி பண்ணை நிர்வாகிகளை (விவசாயிகளை) திமுக அரசின் காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகிறது.
கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களது பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண இந்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

