பூங்கா திறந்த வெறும் 5 நாளில் இந்த நிலையா? மக்களின் உயிரோடு விளையாடாதீங்க: எச்சரிக்கும் இ.பி.எஸ்.,
பூங்கா திறந்த வெறும் 5 நாளில் இந்த நிலையா? மக்களின் உயிரோடு விளையாடாதீங்க: எச்சரிக்கும் இ.பி.எஸ்.,
ADDED : அக் 12, 2024 09:49 PM

சென்னை: மக்களின் உயிரோடு, கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க., அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர், தனது தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க., அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது தி.மு.க., அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது தி.மு.க., அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தி.மு.க., முதல்வரை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

