ஈரோடு எம்.எல்.ஏ., இளங்கோவன் மரணம் தொகுதி அலுவலக 'சென்டிமென்ட்' காரணம்?
ஈரோடு எம்.எல்.ஏ., இளங்கோவன் மரணம் தொகுதி அலுவலக 'சென்டிமென்ட்' காரணம்?
ADDED : டிச 14, 2024 06:55 PM
ஈரோடு:தொகுதி அலுவலக சென்டிமென்ட்டின்படி, எம்.எல்.ஏ., ஆனவர்கள் அரசியலில் ஒதுங்குவது, ஓரங்கட்டப்படுவது, இறப்பது தொடர்கிறது. இதை இளங்கோவன் மரணமும் உறுதி செய்துள்ளதாக, அனைத்து கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த மூத்த அரசியல் பிரமுகர் கூறியதாவது:
ஈரோடு எம்.எல்.ஏ., பயன்பாட்டுக்காக, எஸ்.கே.சி., சாலையில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது. இங்கு கால் பதித்தவர்கள், பதிக்காதவர்களும் கூட, 'அரசியல் வாழ்வில் அஸ்தமிக்கும்' நிலை ஏற்படும் என்ற அபாயகரமான சென்டிமென்ட் தொடர்கிறது.
ஒருங்கிணைந்த ஈரோடு சட்டசபை தொகுதியாக இருந்தபோது, 1996ல் எம்.எல்.ஏ.,வாக இருந்த தி.மு.க.,வின் என்.கே.கே.பெரியசாமி, இந்த அலுவலகத்தை பயன்படுத்தினார். 2001ல் தோற்றார். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க.,வில் முக்கிய சக்தியாக இருந்தவர், அதன்பின் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
கடந்த, 2001ல் எம்.எல்.ஏ.,வான அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தென்னரசு, அதன்பின் போட்டியிட வாய்ப்பின்றி, ஓரங்கட்டப்பட்டார். மீண்டும், 2016ல் தென்னரசு எம்.எல்.ஏ.,வானாலும், இடைப்பட்ட காலத்தில் கடும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எம்.எல்.ஏ., அலுவலக சென்டிமென்டைத் தொடர்ந்து, இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, காளிங்கராயன் விடுதியில் அறை எடுத்து, அலுவலகமாக செயல்படுத்தினார்.
கடந்த, 2006ல் தி.மு.க.,வில் வென்ற என்.கே.கே.பி.ராஜா, கைத்தறித் துறை அமைச்சரானார். இந்த அலுவலகத்தை பயன்படுத்திய நிலையில், நில அபகரிப்பு குற்றச்சாட்டால் அமைச்சர் பதவியை இழந்தார். பின் பல்வேறு காரணத்தால் கட்சி, அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.
இதற்கிடையில், ஈரோடு தொகுதி கிழக்கு - மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேர்தலில், தே.மு.தி.க.,வின் சந்திரகுமார் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். சட்டசபையில் ஜெயலலிதாவுடன் மோதியதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது அலுவலகத்துக்கும் 'சீல்' வைத்தனர். ஒன்றரை ஆண்டு மட்டுமே எம்.எல்.ஏ.,வாக செயல்பட முடிந்ததுடன், தே.மு.தி.க.,வில் இருந்து வெளியேறி, தி.மு.க.,வில் இணைந்தார். அதே தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோற்றுப்போனார்.
அடுத்து, 2021ல் காங்., எம்.எல்.ஏ.,வான திருமகன் ஈ.வெ.ரா., இந்த அலுவலகத்தை புனரமைத்து செயல்படுத்த முயன்றார். கடந்த 2023 ஜன., 4ல் உடல் நலக்குறைவால் இறந்தார். அப்போதும் இந்த அலுவலக சென்டிமென்ட் பூதாகரமானது.
பின், 2023 பிப்., 27ல் இடைத்தேர்தலில் வென்ற அவரது தந்தை இளங்கோவன், உடல் நலக்குறைவு, மகன் இறப்பின் சோகம், குடும்ப பிரச்னைகளால் தளர்ந்து காணப்பட்டு, நேற்று இறந்தார்.
இந்த சோகம் நிகழ்ந்ததால், மீண்டும் அலுவலக சென்டிமென்ட் சர்ச்சை எழுந்துள்ளது. 'மூடநம்பிக்கை' என ஒரு பக்கம் புறந்தள்ளினாலும், தொடரும் அசம்பாவித நிகழ்வுகள் 'ஏதோ ஒன்றை' மட்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.