'ஆன்லைன்' விளையாட்டு தீமைகள் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
'ஆன்லைன்' விளையாட்டு தீமைகள் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
ADDED : நவ 29, 2024 11:49 PM
சென்னை:'ஆன்லைன்' விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்த கட்டுரைப் போட்டி, பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி நடத்தும்படி, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழில், 'ஆன்லைன் விளையாட்டுகளில், மாணவர்கள் ஈர்க்கப்படுவது ஏன்; ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் என்ன; மைதான விளையாட்டு, ஆன்லைன் விளையாட்டு குறித்த பரிந்துரைகள் என்ன' என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில், 'பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஆன்லைன் கேம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனவா; அப்படி எனில், அதை கட்டுப்படுத்த, மாணவர்களுக்கு உங்களின் பரிந்துரைகள் என்ன' என்ற தலைப்பிலும் கட்டுரை எழுத வேண்டும்.
இதில், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கில மொழிகளுக்கு தனித்தனியே, முதல் பரிசு 10,000; இரண்டாம் பரிசு 6,000; மூன்றாம் பரிசு 4,000; ஆறுதல் பரிசாக ஆறு பேருக்கு தலா 1,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். போட்டிகளை, டிசம்பர், 2 முதல் 12ம் தேதிக்குள், நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.