UPDATED : ஏப் 06, 2025 01:21 AM
ADDED : ஏப் 05, 2025 08:45 PM

சென்னை:'தலைவர்களின் சிலைகளை, ஒரே இடத்தில் வைக்க, சமத்துவப் பூங்காக்களை உருவாக்க வேண்டும்' என, அரசுக்கு ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தஞ்சையில் அண்ணாதுரை சிலை மீது, தி.மு.க., - பா.ஜ., கொடிகளை சேர்த்து போர்த்தி சென்றுள்ளனர். தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள தலைவர்களது சிலைகளை சேதப்படுத்துதல், அவமதித்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனால், தலைவர்களின் சிலைகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது. பல தலைவர்கள் உயிரோடு இருந்தபோதும், சிறையில் இருந்தனர்; இறந்து சிலையான பின்னும், சிறையில் இருப்பதுபோல கம்பி வலைக்குள் இருப்பது வேதனை.
பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்ற, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோல, தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளையும் அகற்றி, ஒரே இடத்தில் வைக்க, தாலுகா அளவில், சமத்துவப் பூங்காவை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.