ADDED : ஜன 09, 2024 01:21 AM

உலக, தேசிய, தமிழக நிகழ்வுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்:
நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜின் பிங் தலைமையிலான, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவர் அதிபராக பதவியேற்ற 2012 முதல், ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், சீனாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை வழங்கும் வகையில், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.
சமீபத்தில், இச்சட்டம் அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி, முக்கியமான தேசிய திட்டங்களில் ஊழலில் ஈடுபடும் கட்சிகளுக்கும் கடுமையான தண்டனை தரப்பட உள்ளது.
மேலும் நிர்வாகம், நீதித்துறை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள், மற்றும் நிதி, சுகாதாரம், உணவு, கல்வி போன்ற துறைகளில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது.
இச்சட்டத்தை, தற்போது லஞ்ச ஊழலில் புரையோடிப் போன நம் நாட்டிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டிய மிக அவசர, அவசியமாகும். குறிப்பாக, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுகிறது.
தற்போதுள்ள ஊழல் தடுப்பு சட்டம் என்பது கண்ணுக்கு தெரியாத சட்டமாகவே இயங்கி வருகிறது. இதனால், சகல துறைகளிலும் ஊழல் தாண்டவமாடுகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க ஒரே வழி...
தற்போது சீனாவில் அமல்படுத்தப்பட்டதை போன்று, நம் நாட்டிலும் இச்சட்டம் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான். குற்றம் செய்தவரை விட, குற்றம் செய்ய துாண்டியவருக்கே அதிக தண்டனை தரப்பட வேண்டும் என்கிறது சட்டம்.
அந்த வகையில், தங்கள் வேலை சீக்கிரம் முடிய வேண்டும் அல்லது விதிகளை மீறி, தங்களது காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தாங்களாக முன்வந்தே லஞ்சம் கொடுக்கின்றனர்.
இதனால், இவர்களுக்கும் தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தாலே, நம் நாட்டில், 90 சதவீதம் அளவுக்கு லஞ்சம், ஊழலை ஒழித்து விட முடியும். இதன் வாயிலாக, நம் நாடு பொருளாதாரத்தில் இன்னும் பீடுநடை போடும் என்பதிலும், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.