UPDATED : ஜன 23, 2025 05:14 AM
ADDED : ஜன 22, 2025 08:23 PM

சென்னை:''ஈ.வெ.ரா., அடிப்படையிலேயே பிழையானவர்; முட்டாள்களின் தலைவர்,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னை நீலாங்கரையில் இருக்கும் சீமான் வீட்டருகே ஈ.வெ.ரா., இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பின், சீமான் அளித்த பேட்டி:
ஈ.வெ.ரா., குறித்து புதிதாக, எந்த கருத்தையும் கூறவில்லை. அவர் என்னவெல்லாம் கூறியிருந்தாரோ, அதில் எதெல்லாம் பதிவுகளாக இருக்கின்றனவோ, அதைத்தான் எடுத்து வந்து பேசினேன்; பேசுகிறேன். இதில், என்ன தவறு இருக்கிறது? அப்படி தவறு ஏதேனும் இருந்தால், அந்தத் தவறுக்கு ஈ.வெ.ரா.,தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஈ.வெ.ரா., குறித்து நான் பேசியதற்காக, என் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. விசாரணையின்போது, ஈ.வெ.ரா., குறித்த ஆதாரங்களை காட்டுவேன். தேவையானால், கோர்ட்டுக்கும் எடுத்து வந்து, நீதிபதியிடம் கொடுத்து நியாயம் கேட்பேன்.
அதன் வாயிலாகவாவது, ஈ.வெ.ரா.,வின் 'அபூர்வமான' கருத்துக்கள் ஊர், உலகத்துக்கு தெரியட்டும்; அதில் தவறில்லை.
அண்ணா பல்கலை மாணவி பலாத்கார விவகாரத்தில், நியாயமான நடவடிக்கையை வலியுறுத்தி போராட முயன்றவர்களுக்கு அனுமதி மறுத்த அரசு, என் வீட்டை முற்றுகையிட மட்டும் எப்படி அனுமதி அளித்தது?
இவ்விவகாரத்தில் மொத்த வியாபாரியான, தி.க., தலைவர் வீரமணியே அமைதியாக இருக்கிறார். 'பொட்டி கடை'களான மற்றவர்கள் ஏன் பொங்குகின்றனர்? ஈ.வெ.ரா., பெருமையை வீரமணி பேசட்டும்; அதற்கு பதில் சொல்கிறேன்.
அடிப்படையிலே ஈ.வெ.ரா., பிழையானவர். ஈ.வெ.ரா., யாருக்குத் தேவையோ, அவர்கள் அவரை பூஜை அறையில் கூட வைத்துக் கொள்ளட்டும்; மூன்று வேளையும் பூஜை கூட செய்யட்டும். இனி அவர், எங்களுக்கு தேவையில்லை. 'தமிழ், தமிழர், தமிழர் அரசு' என்று பேசுவது எல்லாம் பித்தலாட்டம்; திராவிட எழுச்சியை தடுப்பதற்கு செய்யும் அயோக்கியத்தனம். ஆரியர்களுக்கு செய்யக்கூடிய கைக்கூலித்தனம்.
'தமிழ் முட்டாள்களின் பாஷை, தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள், அப்படி தமிழில் என்ன தான் இருக்கிறது?' என, ஈ.வெ.ரா., பேசியிருக்கிறார். கர்நாடகாவில் பிறந்த அவர், என் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டு, எம்மொழியை, 'முட்டாள்களின் பாஷை' என்று கூறி தாழ்த்தி பேசினால், அமைதியாக இருக்க முடியுமா? அவருக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது?
உடனே, 'எப்பவோ பேசினதற்கு இப்போ என்ன வந்தது?' என கேட்கின்றனர். எப்ப சொன்னாலும், சொன்னதுதானே!
அடிப்படையில் என் மொழி முட்டாள்களின் பாஷை என்றால், அவரை முட்டாள்களின் தலைவர் என்று தானே புத்தகங்களில் போட்டிருக்க வேண்டும்? வள்ளலார், திருவள்ளுவரை, ஆரியர் கூட்டம் அபகரிக்க நினைக்கிறது; திராவிட கூட்டம் அழிக்க நினைக்கிறது. ஏனென்றால் திராவிடர்களுக்கும், வள்ளுவருக்கும் சம்பந்தமில்லை.
'நீ பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரம் அல்ல; அது உன்னை அடிமைப்படுத்துகிறது' என்று ஈ.வெ.ரா., கூறினார். மேடையில் வைத்து தாலியை அறுத்ததுபோல், ஏன் கர்ப்பப்பையை வெட்டி எறியவில்லை?
ஈ.வெ.ரா., சொன்னதுபோல், கனிமொழி உள்ளிட்டோர் செய்தனரா; ஏன் அவர்கள் குழந்தை பெற்றெடுத்திருக்கின்றனர்?
ஈ.வெ.ரா., இஸ்லாம் மதத்துக்கும் எதிரானவர்.
ஈ.வெ.ரா.,வின், 32 அமைப்புகளை ஒன்று சேர்த்து, என்னை எதிர்க்கின்றனர்.
தடியை ஊன்றி தள்ளாடி வரும் கூட்டம் அது; ராணுவ அணிவகுப்புடன் நிற்கும் கூட்டம் என்னுடையது. அந்தளவுக்கு தளர்ச்சி பெற்றிருக்கிறது திராவிடம்; பேரெழுச்சி பெற்றிருக்கிறது நான் பேசும் தமிழ் தேசியம்.
என்னிடம் மோத வேண்டாம்! திராவிட ஆட்சியாளர்களை வீழ்த்தாமல், இம்மண்ணில் துாய அரசியல் மலராது. நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; அதற்குள் அலறினால் எப்படி?
ஈ.வெ.ரா., அமைப்பினர், எந்த மக்கள் பிரச்னைக்காவது, வீதிக்கு வந்தனரா?
அரசியலில் முடிந்தால் என்னை அப்புறப்படுத்துங்கள்; உண்மையான கம்யூனிசம், முற்போக்கு, பெண்ணிய உரிமை எங்களிடம் இருக்கிறது.
சமூக நீதி பேசும் அவர்களுக்கு, ஜமுக்காள நீதி கூட கிடையாது. ஜாதிவாரி கணக்கெடுக்க துணிவிருக்கா? மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது கூட எடுக்காமல் இருந்தது ஏன்?
மத்திய அரசு எடுக்காது என தெரிந்தே, அவர்கள் மீது பழிபோடுகின்றனர். கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றும் போதும், மாநிலத்தில் ஆட்சியிலும் மத்திய அமைச்சரவையிலும் இருந்தது யார்?
இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்கின்றனர். இப்படி எல்லாமே திட்டமிட்டு நடந்திருக்கிறது. என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் என் எதிரிகள் அல்ல; நான் யாரை எதிர்க்கிறேனோ, அவர் தான் என் எதிரி.
அந்த வகையில், தி.மு.க., தான் என் எதிரி.
இடைத்தேர்தலில், 1,000 ரூபாய் வழங்கியதை தவிர்த்து, வேறு என்ன சாதனையை கூறி, அவர்களால் ஓட்டு கேட்க முடியும்?
நாளை முதல், பிரசாரத்துக்கு செல்லவிருக்கிறேன். தி.மு.க.,விடம் மறைமுகமாக, தன் மகனுக்கு, எஸ்.வி.சேகர், 'சீட்' கேட்கிறார்.
ஒருபுறம் ஆரியத்தை எதிர்த்து கொண்டே, ராஜாஜியிடம் ஈ.வெ.ரா., நட்பு பாராட்டியது ஏன்? இருவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காகவா?
ஈ.வெ.ரா., தமிழ், தமிழருக்கு எதிரானவர் என்பதால் எதிர்க்கிறோம்; எதிர்ப்போம்; எதிர்த்துக் கொண்டே இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.