ஈ.வெ.ரா., பித்தலாட்டம் புத்தகத்துக்கு தடை; சென்னை புத்தக கண்காட்சியில் போலீஸ் அராஜகம்
ஈ.வெ.ரா., பித்தலாட்டம் புத்தகத்துக்கு தடை; சென்னை புத்தக கண்காட்சியில் போலீஸ் அராஜகம்
UPDATED : ஜன 13, 2026 10:44 PM
ADDED : ஜன 13, 2026 05:56 PM

சென்னை: சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட, 'இந்தி எதிர்ப்பு போரில் ஈ.வெ.ரா., பித்தலாட்டம்' என்ற மறுபதிப்பு நுாலை போலீசார் பறிமுதல் செய்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்து சிவானந்த அடிகள், பலராலும் மதிக்கப்பட்ட தமிழறிஞர்; சிவனடியார். இவர், 1965ம் ஆண்டு எழுதி, 'இந்தி எதிர்ப்பு போரில் திராவிட பித்தலாட்டம்' என்ற நுாலை வெளியிட்டார்.இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது எப்படி, யார் அதை முன்னின்று நடத்தியது, அதில் ஈ.வெ.ரா., எப்படி இடையில் வந்து சேர்ந்தார், அதை எப்படி தன் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொண்டார் என்று ஈழத்து சிவானந்த அடிகள் அந்த நுாலில் விரிவாக எழுதியுள்ளார்.
இந்த நுால் வெளியானபோது, அதில் குறை கூறப்பட்டுள்ள ஈ.வெ.ரா., உள்ளிட்ட அனைவரும் உயிரோடு தான் இருந்தனர். ஆனால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; புத்தகத்தை தடை செய்யும்படி கேட்கவும் இல்லை.
இந்த நுால் எழுதிய ஈழத்து சிவானந்த அடிகள் தான், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவராக இருந்தவர். அவரது நுால், 60 ஆண்டுகளாக வாசிக்கப்பட்டு, பல முறை மறுபதிப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு புத்தக கண்காட்சியை முன்னிட்டு, தமிழம் பதிப்பகத்தால் மறுபதிப்பும் செய்யப்பட்டுள்ளது.

அச்சிட்டு வெளியிடப்பட்ட புத்தகங்களை, பறிமுதல் செய்வதற்கு போலீசாருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில், புத்தக கண்காட்சி அரங்கில் புகுந்து புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீரத்தை காட்டிய போலீஸ்!
ஒரு நுாலை தடை செய்ய வேண்டும் என்றால், அது பற்றி பாதிக்கப்பட்டவர் உரிய முறையில் புகார் அளிக்க வேண்டும்; உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்/ வெளியீட்டாளர் தரப்பினருக்கு உரிய வாய்ப்பு தரப்பட வேண்டும்.
ஆனால், 'ஈவெரா பித்தலாட்டம்' நுால் பறிமுதல் விவகாரத்தில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. நேரடியாக தடாலடி நடவடிக்கையாக போலீசார், புத்தகங்களை பறிமுதல் செய்து விட்டனர். 'அரசுக்கு வேண்டிய யாரோ ஒருவர் கொடுத்த அழுத்தம் காரணமாக, கருத்து சுதந்திரம் பற்றி எதுவும் கவலைப்படாமல் நேரடியாக புத்தக கண்காட்சியில் புகுந்து வீரத்தை காட்டி விட்டனர், சென்னை போலீசார்' என்கின்றனர், பாதிக்கப்பட்ட தரப்பினர்.
இதுதான் உங்கள் கருத்து சுதந்திரமா?
தமிழக முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள், அவ்வப்போது கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பது வழக்கம். கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பல அறிக்கைகள், அவரது சமூக வலைதள பக்கங்களில் குவிந்து கிடக்கின்றன.
ஆனால், இப்போது அவற்றுக்கு மாறாக, தங்களுக்கு உவப்பில்லாத கருத்து என்பதற்காக இந்த நுாலை, அதிகாரத்தை பயன்படுத்தி பறிமுதல் செய்துள்ளனர். அதுவும், 60 ஆண்டுக்கு முன் வெளியாகி பல பதிப்பு கண்ட நுாலின் மறுபதிப்பை பறிமுதல் செய்திருப்பது, நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று என்ற அவர்களது நிலைப்பாட்டையும் வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது.

