ADDED : பிப் 08, 2024 01:36 AM
சென்னை:அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை விடுவித்த உத்தரவுக்கு எதிராக, தாமாக முன்வந்து எடுத்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
இந்த நான்கு வழக்குகளிலும், பிப்ரவரி 5ல் இறுதி விசாரணை துவங்கி, 9ம் தேதி வரை நடப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இந்த நான்கு வழக்குகளும், கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், விசாரணையை நடத்தாமல் தள்ளி வைத்தார்.
இந்த வழக்குகளை, யார் விசாரிப்பது என்பதை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்யும்படி, கடந்த 5ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

