ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவதில் பள்ளி வாகனங்களுக்கு விலக்கு
ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவதில் பள்ளி வாகனங்களுக்கு விலக்கு
ADDED : மே 20, 2026 01:02 AM
சென்னை: பள்ளி, கல்லுாரி வாகனங்களில், ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடம் காட்டும் கருவி பொருத்துவதில் இருந்து, தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2019 மத்திய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி, வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களில், ஜி.பி.எஸ்., எனப்படும், 'இருப்பிடம் காட்டும் கருவி' பொருத்துவது, கடந்த ஜனவரி முதல் கட்டாயமாக்கப்பட்டது. பின், படிப்படியாக கால அவகாசம் அளித்து, நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், தற்போதுள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இயக்கப்படும், 40,415 வாகனங்களில், 16 அம்ச பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாகனங்களில், அவற்றின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள், தங்கள் வாகனங்களுக்கு, இந்த கருவி பொருத்துவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாடு முழுதும், வணிக பயன்பாட்டிற்கான, அனைத்து வாகனங்களிலும், ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது, படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்வி நிறுவனங்களின் வாகனங்களுக்கு, தற்போது தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது வேண்டுமென்றாலும், மத்திய போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்க உத்தரவிடும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
