ADDED : டிச 07, 2024 08:07 AM
திருப்பூர் : கண் தானம் பெறப் பதிவு செய்தவர் இறந்தால், குடும்பத்தினர் ஒப்புதல் இன்றி கண்தானம் பெறும் வகையில் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகின்றன.
கண் தானம் செய்வதாக பதிவு செய்த ஒருவர், இறந்த பின் கண்களை தானம் பெற மருத்துவக்குழுவினர் முயலும்போது, பெரும்பாலான இடங்களில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனுமதிப்பதில்லை.
நடைமுறை சிக்கல்களால், தேவைப்படுவோருக்கு கண்கள் கிடைக்காமல் போகிறது.
மருத்துவத்துறையினர் கூறியதாவது:
மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் 1994ன் படி, இறந்த நபர் உயிருடன் இருக்கும் போது கண் மற்றும் உடல் தானம் செய்வதாக பதிவு செய்திருந்தாலும், உறவினர் ஒப்புதல் கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது.
உறவினர் ஒப்புதல் இல்லாமல் இறந்தவர்களின் கண்களை தானமாக பெற இயலும் வகையில் விரைவில் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
இதன் மூலம், மருத்துவமனை, வீடுகளில் இறப்பவர் கண் தானத்துக்கு பதிவு செய்துள்ளாரா, இல்லையா என்பதை எளிதில் கண்டறிந்து, உடனடியாக கண் தானம் பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.