'ப்ளூ, பன்றிக்காய்ச்சலிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அவசியம்'
'ப்ளூ, பன்றிக்காய்ச்சலிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அவசியம்'
ADDED : செப் 18, 2024 11:52 PM
சென்னை:தட்பவெப்ப நிலை மாற்றத்தால், சுவாசப் பாதை வழியே, 'ப்ளூ, பன்றிக்காய்ச்சல்' பாதிப்பு ஏற்படும்; மேலும், சிறுநீரக தொற்றும் ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
இதுகுறித்து, அரசு பொது நல டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:
தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையால், கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். எனவே, வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்த வேண்டும். மனிதர்களுக்கு சுவாச பாதிப்பு தொற்று அதிகரிக்கும். குறிப்பாக, 'ப்ளூ' காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.
வெயில் தாக்கத்தால், உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, சிறுநீர் மஞ்சள் நிற அடர்த்தியில் வெளியேறும். அவ்வாறு வெளியேறினால், நீங்கள் எளிதில் சிறுநீரக தொற்றுக்கு ஆளாக நேரிடும். எனவே, தினமும் 3 லிட்டருக்கு மேல் குடிநீர் பருக வேண்டும். பள்ளி, கல்லுாரிகள், அலுவலகம் செல்வோர் காய்ச்சலால் எளிதில் பாதிக்கப்படலாம்.
அவ்வாறு செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். காய்ச்சல் வந்தால், குறைந்தது இரண்டு நாட்கள் ஓய்வெடுப்பதும், டாக்டரிடம் சிகிச்சை பெறுவதும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

