ரயிலில் ஏறும் இடத்தை மாற்றும் வசதி; பயணியர் கோரிக்கை ஏற்கப்படுமா?
ரயிலில் ஏறும் இடத்தை மாற்றும் வசதி; பயணியர் கோரிக்கை ஏற்கப்படுமா?
ADDED : ஏப் 29, 2026 04:31 AM

சென்னை: 'ரயில் முன்பதிவு டிக்கெட்டில் ஏறும் இடத்தை மாற்றும் வசதியில் ஒரே டிக்கெட் பி.என்.ஆரில் இருப்பவர்கள் விருப்பம் போல் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னர் ரயில் டிக்கெட் அட்டவணைகள் நான்கு மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படும்போது பயணியருக்கு இருக்கைகள் உறுதி செய்யப்படாதபட்சத்தில் கடைசி நேரத்தில் பயணத் திட்டங்களை ரத்து செய்வது அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்வதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டனர்.
புதிய விதிமுறைகள்படி முதல் டிக்கெட் அட்டவணை 10 மணி நேரத்துக்கு முன்பே தயாரிக்கப்படுவதால் பயணியர் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும்.
இதையடுத்து ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் வரை 'போர்டிங் பாய்ன்ட்' அதாவது ரயிலில் ஏறும் இடத்தை மாற்றி கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே ஏப்.2ம் தேதி அறிமுகம் செய்தது. இதற்கு பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதுகுறித்து ரயில்வேக்கு திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க நிர்வாகி பாஸ்கர் அனுப்பியுள்ள கடிதம்:
பயணியர் பெரும்பாலும் கடைசி நிமிடத்தில் தங்கள் ஏறும் நிலையத்தை மாற்ற வேண்டியிருக்கும். அந்த வகையில் புதிய விதிமுறையின்படி ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் வரை ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த வசதிக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் ஒரே டிக்கெட்டில் இருப்பவர்கள் முழுதுமாக தான் இடத்தை மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு ஒரு டிக்கெட் பி.என்.ஆரில் இருப்பவர்களில் ரயிலில் ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அனைவருமே மாற்றிக் கொள்ளவே தற்போது வசதி தரப்பட்டுள்ளது.
ஒரு பகுதியாக அதாவது ஒரு டிக்கெட்டில் இருப்பவர்களில் ஓரிருவர் மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தரவில்லை. இந்த வசதியை ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள், 'பயணியர் கோரிக்கையை ஆய்வு செய்த பின்னர் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றனர்.
