பி.ஆர். பாண்டியனின் 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த ஐகோர்ட்; ஜாமின் வழங்கியும் உத்தரவு
பி.ஆர். பாண்டியனின் 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த ஐகோர்ட்; ஜாமின் வழங்கியும் உத்தரவு
ADDED : டிச 19, 2025 05:01 PM

சென்னை: தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து, தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
2015ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் கரிய மங்கலத்தில் இந்த போராட்டம் நடந்த போது, ஓஎன்ஜிசி நிறுவன சொத்துகளை சூறையாடியதாக பி.ஆர். பாண்டியன் உள்பட 24 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் திருவாரூர் அமர்வு நீதிமன்றம் பி.ஆர். பாண்டியனுக்கும், செல்வராஜூ என்பவருக்கும் தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜூ தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், தண்டனையை நிறுத்தி வைத்து, தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந் நிலையில் இந்த மனு நீதிபதி சுந்தர்மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொட.ர்ந்து, பி.ஆர். பாண்டியன், செல்வராஜ் ஆகிய இருவருக்குமான தண்டனையை நிறுத்தி வைத்து, அவர்களுக்கு ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல்கள் கிடைக்க பெற்ற பின்னர், திருச்சி சிறையில் உள்ள பி.ஆர். பாண்டியன், செல்வராஜூ இருவரும் ஜாமினில் வெளிவருகின்றனர்.

